வெற்றுத்திண்ணை

தூசிகள் படர்ந்த
வெற்றுத்திண்ணை
சற்றே வேகமாக
கடந்திருக்குமோ வாகனங்கள்

Read more...

சில நிமிடங்கள் கொடுங்கள்

தயவுசெய்து
சில நிமிடங்கள் கொடுங்கள்
ஆடைகளை களைகிறேன்
விலங்காகிறேன்
பின் கண்டிப்பாக வாலாட்டுகிறேன்

Read more...

முதல் நாள் முதல்

எனக்கு இந்த dress வேணாம்.எனக்கு அந்த பூப்போட்டது தான் வேணும்

நீ இப்போ schoolக்கு போகப்போற.இது uniform dress.இதை போட்டாதான் schoolக்கு போகமுடியும்.

எதுக்கு school போகனும்?

படிக்கனும் னா school போகனும்டா கண்ணு.

அப்ப நான் படிக்கல.

முதல் நாளே இப்படி சொல்லாத கண்ணு.படிச்சாதான் வேலைக்கு போகமுடியும்.வேலைக்கு போனாதான் பணம் சம்பாதிக்கமுடியும்.

எனக்கு இப்ப அந்த dress தான் வேணும்.பணம் எல்லாம் வேணாம்.

பணம் இருந்தாதான் கண்ணு நல்லா வாழமுடியும்.


எவ்வளவு பொய்கள்....

Read more...

பூப்பறித்தல்

எதிர்பார்க்கவேயில்லை
இந்தக்காலைப்பொழுதில்
சற்றுமுன் மலர்ந்த
பூ
பறிக்கபடுமென்று

Read more...

தவிப்பு

திசை மாறிய
பெரும் காற்றில்
என் அறையின்
எல்லா கதவுகளும்
அடைவதும் திறப்பதுமாய்

Read more...

அவசரமாக

மேகம் சூழ்ந்த மாலையில்
அவசரமாக
வானம் பார்த்தனர்

யாரும் நிற்பதில்லை
நிறுத்தங்களில் கூட
கோடையில் கூட

Read more...

தூரங்கள்

1.
காலுதறி
ஓடத்துவங்கி வெகுநாட்கள் ஆகிறது
இன்னும்
எவ்வளவு தூரம்
தவழ்ந்துகொண்டே துரத்துமோ
அந்த குழந்தை

2.
அந்த
முதல் வார்த்தைக்காக
இன்னும் எவ்வளவு
பேச வேண்டி இருக்குமோ
இன்னும் எவ்வளவு மௌனங்களை
கடந்து செல்ல வேண்டுமோ

Read more...

உயிர்த்திருத்தல்

வேர்களை பத்திரப்படுத்தும்
பூந்தொட்டி
மெல்ல தீண்டுகிறது
உதிர்ந்து விழும் மலர்களை

Read more...

கால் தடங்கள்

பற்றிய கைகள்
விலகுகின்றன பதற்றம்
ஏதுமற்று

மெல்லத் திரும்புகிறோம்
அவரவர்
வெளிகளுக்கு

விட்டுச்சென்ற
நம் கால்தடங்கள்
மட்டும் பேசிக்கொண்டேயிருக்கின்றன

Read more...

கோடைக்கால அந்தி

இறுக்கமான போர்வை
மேலும்
ஈரமான கனவொன்று
வேண்டும்

அல்லது

இந்த மாலையை
எதிர்கொள்ள

ஒரு
ஆழமான
முத்தம் மட்டும்

special Dedication: Mr and Mrs.Ambakur

Read more...

விடாது துர‌த்தும் கேள்விக‌ள்

என்னை தொடர் பதிவிற்கு அழைத்த லாவண்யாவிற்கு நன்றி.

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

லஷ்மண் ஆக பிறந்து இலக்குவனாகி இப்பொழுது இராவணன்

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

கண்கள் கலங்குவது என்றால் சில இரவுகளுக்கு முன் மிகுந்த மகிழ்ச்சியில் ஒரு தாலாட்டின் நீட்சியாக
மனம் கலங்குவது என்றால் இந்த நொடியில் கூட. யார் கல் எறிந்தார்கள் என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

சத்தி்யமா இல்லை ;)

4.பிடித்த மதிய உணவு என்ன?

முருங்கை சாம்பார் ;)

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

ம்ம்ம். துளிர்த்து வேர்த்து (வியர்த்து அல்ல) பின் வீழ்ந்தும் விடும் சில நாட்களிலே.
சிலவைகையல் நீண்டு கொண்டே இருக்கிறது என் பாதையில் துனையாக நிழலாகவும்.

பெரும்பாலான உறவுகள் உடனே தொடங்கியது தான் (வாழ்க்கை மிக சிறியது மக்களே)

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கடல் பிடிக்கும் (பழவேற்காடு கரையில்)

அருவி - எனக்கும் அதற்குமான உறவு மிக உன்னதமானது. குளிக்க மட்டுமல்ல குதிக்ககூட விரும்புவேன்
அதி்ரபல்லி(கேரளா) மற்றும் high forest (வால் பாறை)

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

அறிமுகமற்ற ஆண் - உடல் அசைவுகள் (body language)

அறிமுகமற்ற பெண் - கண் , முகம் மற்றும் முலை

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

பிடிச்சது : உண்மைக்குள் ஒளிய முயற்சிப்பது

பிடிக்காதது: பொய்சொல்ல முயற்சித்து (அலுவலகத்தில் மட்டும்) தோற்பது

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?


சரி பாதி யாருன்னு தேடி சலிச்சிட்டேன். நீங்க வேற.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

யாரும் பக்கதுல இல்லைன்னா வருந்துவேன்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

அடப்போங்கப்பா. ;)

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் :))) (radio mirchi)

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

வானத்தின் நீலம்

14.பிடித்த மணம்?

பெண்களின் வாசனை திரவியங்கள்

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?


16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

பதி்விடப்படாத கவிதை ஒன்று

17. பிடித்த விளையாட்டு?

விளையாட்டு என்பது உன் அருகாமையை நான் கொண்டாடுவதே (காடு- ஜெ.மோ)

18.கண்ணாடி அணிபவரா?

இப்ப இல்ல.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

ingmar bergman and micheal angel antonioni

மகேந்திரன்

20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க (அருமை.)

21.பிடித்த பருவ காலம் எது?

உன் அருகாமையோடு எல்லா காலமும்.எல்லா பருவமும் அழகுதானே.


22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
ஆத்மாநாம் கவிதைகள் (மீள் வாசிப்பு)
நீராலானது. (மனுஷ்யபுத்திரன்)(மீள் வாசிப்பு)

23.உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எனக்கு பிடித்த புகைப்படம் எடுக்கும் பொழுது

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்தது:மௌனம் மட்டும் மௌன ராகம்

பிடிக்காதது: எனக்கு புரியாத மொழியில்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

rajasthan

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தனிமை கொடுத்த திறமை நிறைய இருக்கு.
காலம் திசைகாட்டுமென காத்திருக்கிறேன்

புகைப்படம்
கவிதை
திரைக்கதை

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

பிரிவு

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

காமம்

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

அதிரபள்ளி அருவி

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

உயிர்ப்போடு

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?

மனைவி இல்லாதவங்க கிட்ட இப்படி கேட்டா அப்புறம் dont plug words from my mouths :)

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

கனவுக்கும் நினைவுக்கும் இடையே ஆடிக்கொண்டிருக்கும் ஒரு கடிகாரம்

Read more...

திருமணம்

ஏறத்தாழ
2532 சட்டங்களின் படி
நான் தண்டனை பெறும் குற்றவாளி
மறைத்தும் தப்பித்தும்
வாழ்ந்து
கொண்டிருக்கிறேன்

திருமணத்திற்கு
பிறகு
இன்னும் கூடுதலாக
சில சட்டங்களின் படி

Read more...

மனோநிலை - 5

வெற்றுக்கோப்பை - ராஜா சந்திரசேகர்

வெற்றுக்கோப்பை போதும்
என் தாகம் தீர்க்க

நீர் நிரம்பிய பாத்திரங்கள்
அதிகரிக்கவே செய்யும்
தாகத்தை

------------------------------------------------------------

முடிவிலி - ரெஜோவாசன்

ஒவ்வொரு பின்னிரவின் கரு நிழலிருளிலும்
சுடும் கரை மணல் தொடுகையிலும் …

நிசப்த்தமான தெருக்களில்
நீண்ட தனி நடைகளிலும் …
மழை முடிந்த பின்
ஆடைகள் ஊதிப் பார்க்கும் வாடையிலும் …

கூட ஒட்டி வரும் தனிமையிலும் …

தேடிப்பார்க்கிறேன்
நாம் சந்தித்ததற்கான தடையங்கள்
ஏதேனும் உளதா என ..

நேற்றைய சந்திப்புகள் வெகுதூரம்
தாண்டிச் சென்றுவிட்டிருக்கின்றன
இன்றுகள் தொடர்ச்சியாக
இணைந்து கொண்டிருக்கின்றன அதே
இரயிலின் கடைசிப் பெட்டிகளாக ...

தவிர்க்க முடிவதில்லை
தென்னங் கீற்றுகளிடை
சிரித்திடும் விண்மினிகளின்
நினைவு படுத்துதலை ...

தனித்துண்ணும் எனை எள்ளும்
முட் கரண்டிகளின்
வளைந்து குத்தும் பரிகாசங்களை ...

வெகுநேரம்
வெறித்துப் பார்க்கப்படும்
புத்தகங்கள் வெறுப்புற்றுக் காற்றுடன்
உரையாடும் சரசரப்பை ...

நடு இரவில்
தன் நிர்வாணம் பார்க்கப்படுவதை விரும்பாமல்
வெளிச்சம் சுருக்கிக் கொள்ளும்
இரவு விளக்கின் பின்
ஒளிந்து கொள்ளப் போகும்
சுவர் பல்லியை ..

தவிர்க்க முடிவதில்லை
மீண்டும் மீண்டும்
சுற்றிச் சுழன்று
மாட்டிக் கொள்கிறேன்
மெல்லினங்கள் ஏற்படுத்தும்
மீள முடியாக் காயங்களில் …

சுழல் மீண்டு வரும் பொழுது
எல்லாம் மறந்து
தேடத் துவங்குவேன் மீண்டும்
நாம் சந்தித்ததற்கான தடையங்கள்
ஏதேனும் உளதா என ..

எல்லாத் தடயங்களையும்
என்னுள் தொலைத்துவிட்டு
இல்லை ..

மறைத்து வைத்த இடம்
மறந்து விட்டு போய் விட்டு

Read more...

திண்ணைத்தூண்

நீ எனக்கு மிகவும் நெருக்கமா இருக்க. உங்கிட்ட என்னை பத்தி எல்லாம் சொல்லனும்னு ஆசையா வரேன்.ஆனா உனக்கு என் வாழ்க்கையும் இறந்தகாலமும் அதன் வலிகளும் பிடிக்ககாதப்போ நான் இந்த உலகத்தின் காதை நெருங்குறேன். ரகசியம் பேச. என்னால இனியும் தனியா பேச முடியாது.

திண்ணை பார்த்திருக்கியா? குழந்தையா இருக்கும் போது திண்ணையில தூண்ல தலை சாஞ்சி உட்கார்ந்திருக்கியா? தெருவ பார்த்துட்டே? அப்புறம்...அழுதிருக்கியா?

நான் அழுதிருக்கேன்.அழுகை வறண்டு வெயிலை பார்த்துட்டே உட்கார்ந்திருக்கேன் வயித்துல பசி எடுக்கிறவரை.எதுக்கு தெரியுமா? மிட்டாய்க்கோ சொக்காக்கோ எந்த பொம்மைக்காகவோ நினைவு தெரிஞ்சு அழுததில்ல. மனிதர்களுக்காக மட்டும் தான். அப்ப இருந்து இப்ப வரைக்கும். மனித அருகாமைக்கும் அன்பிற்கும் தான்.

எவ்ளோ நாள் அந்த தூண் ல சாஞ்சிட்டு வீதியில போறவங்கள பார்த்து எங்க வீட்டுக்கு வரமாட்டாங்களா எங்கிட்ட பேச மாட்டாங்களான்னு ஏங்கியிருக்கேன் தெரியுமா?
அவுங்க கடந்து போற வரைக்கும் பார்த்துட்டே இருப்பேன்.கடந்து போனதும் ஆழமான வலி ஒன்னு வரும் பாரு.ஏன் வலிக்குதுன்னு தெரியாது.என்ன பண்ணன்னு தெரியாது. கடந்து போனவங்க யாரையும் எனக்குத் தெரியாது.எந்த உறவும் கிடையாது.திரும்பி அவுங்கள நான் பார்ப்பனான்னு கூட கண்டிப்பா தெரியாது ஆனா நான் வருத்ததுல இருப்பேன் அவுங்க நிராகரிச்சதா. அந்த நிராகரிப்பை தாளாம சில நேரம் அழுதுடுவேன்.(இதை நகுலன் கூட ஒரு கவிதையா எழுதியிருப்பார்).

நான் பொய்சொல்லல. ஆனா இந்த உண்மை ஏன் எனக்கு மட்டும் நடக்குதுன்னு விளங்கினதே இல்லை. யார்கிட்டயும் சொல்றதும் இல்லை. பயமா இருக்கும்.
இப்ப வாவது எழுதறேன். 5-6 வயசுல என்ன பண்ணிட முடியும். ஆனா அப்பவே ரொம்ப யோசனைகள் வரும். நான் கைதவறி எதையும் போட்டு உடைச்சிட்டா அம்மாவோ அப்பாவோ அடிச்சாங்கன்னா ஏன் இவுங்களுக்கு புரியல. நான் ஒன்னும் தெரிஞ்சு பண்ணலையேன்னு. பண்ணனும் நினைச்சதில்லையே. இதை புரிஞ்சிக்காம அடிக்கிறாங்களேன்னு.

ஒரு குற்றம் நிகழ்கிறது.நீ காரணமாகுற. குற்ற உணர்வு உன்னை தின்னுது. உம்மேல நம்பிக்கை வெச்சு உனக்கு ஆறுதலா பேச வேண்டிய பெத்தவங்க ஏன் தப்பு செஞ்சன்னு அடிச்சா எப்படி அவுங்க பக்கதுல போகத்தோணும். இந்த மாதிரி யோசனைகளால அவுங்க கிட்டயிருந்து விலகியே இருப்பேன்.அப்ப எல்லாம் திண்ணைக்கு ஓடி வந்து உட்கார்ந்துடுவேன்.திண்ணை காட்டும் வீதியும் வானமும் அப்புறம் என்னை மிகவும் கவர்ந்த அந்தத் தூணும் என்னை பத்திரப்படுத்தும்.

எப்பவாவது உறவுகள் யாரும் வந்து என்னை கொஞ்சினா எவ்ளோ சந்தோசமா இருக்கும் தெரியுமா.வீடு அப்படியில்லை. வீடு பெரும்பாலும் கோடுகளால நிறைஞ்சது.கொஞ்சம் திரும்பினாலும் சில கோடுகள் அழிஞ்சிடும்.உன்னை காட்டிக்கொடுத்துடும். சற்று முன் இல்லை ஆனா இப்ப இனி நீ குற்றவாளி.இன்னைக்கு வீடு தன் இயல்பை அடையப்போறதில்லை.இயல்பை விட கொடிய மௌனம் வரப்போகிறது. அதற்கு நீ தான் காரணம்னு நினைக்கும் போது இன்னும் பலமடங்கு வருத்தம் வந்துசேரும். அதோடு அது நின்னுட போறதில்ல.தவறு மீண்டும் மீண்டும் சுட்டிக்ககாட்டப்படும்.தொடர்ந்து .அந்த குற்றம் என் அடையாளமாக்கப்படும். எல்லா பொழுதுலையும் எனக்கான ஆறுதல் அந்த திண்ணையும் தூணும் தான்.அதன் மேல தலைசாச்சிக்கலாம்.தலை சாய அம்மா மடி அனுமதி எப்பவும் மறுக்கப்படும் பொழுது ஒருத்தனுக்கு எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்ளும் அந்த மரத்துண்டின் ஆதூரம் இயற்கையின் அரவணைப்பா மிக ஆறுதலா இருக்கும்.

இப்பக்கூட சில தினங்களுக்கு முன்ன அந்த திண்ணைத்தூணை தேடினேன். ஆமாம்.நானோ என் அன்போ என் கண்ணீரோ நிராகரிக்கப்படும் போதெல்லாம் அதே தூணை தான் தேடி சாஞ்சிக்கிறேன் மனசுலயே.
உண்மையான கண்ணீர் மதிப்பளிக்கப்படும்னும் நமக்கு பிடிச்சவங்க அதை உணருவாங்க ன்னும் நினைச்சி நினைச்சி ஏமாந்து அந்த நம்பிக்கை மொதமொதல்ல உடைஞ்சது அங்க தான்.அழுது அழுது காய்ந்த கண்ணீரின் சுவடுகள் ஏற்படுத்தும் வரிகள் அந்த நிராகரிப்பின் அடையாளமாகி இனி அழுது என்னன்னு யோச்சிச்சி அந்த வெறுமையோட (வெறுமைன்னு அப்ப தெரியாது) முகத்தை கழுவிட்டு போய் சாப்பிட உட்கார்ந்த அதே பால்யம் தான் இன்னும் தொடருதோன்னு தோனது.ஆனா நல்லாபசிக்கும் அந்த மாதிரி பொழுதுல.மத்தவங்க மாதிரி சாப்பிடமுடியாம இருந்ததில்லை எந்த வருத்ததிலையும்.இந்த பழக்கத்தால தான் என்னால பலபேர காதலிக்க முடிஞ்சதோ.எல்லா காதலும் தோற்றும் இன்னும் தேடல் தொடரமுடியுதோ என்னமோ.

பக்கத்து வீட்டு உறவுகளுடன் மட்டும் அனுமதிக்கப்பட்ட ஓரு குழந்தை யின் மிகப்பெரிய - ஒரே மைதானம் அந்த திண்ணை தான். சண்டைபோட்ட வீடுகளா இருந்தாலும் திண்ணையும் குழந்தைகளும் சேர்ந்துதான் இருக்கும்.பெத்தவங்களுங்கு முக்கியமா படுற எதுவும் குழந்தைகளை பாதிக்கிறதில்லை. குழந்தைகளின் முக்கியங்களை பெத்தவங்க நெருங்குறதில்லை.

எப்பவாவது தான் மழைவரும் எங்க ஊர்ல.அப்ப அந்தத்தூண் பக்கத்துல உட்கார்ந்துட்டு உடல்முழுக்க சாரல் அடிக்கும் பொழுது உலகத்தின் மொத்த சந்தோசத்தையும் எனக்கே எனக்கா பரிசளிப்பதாக நெனச்சு கைவிரித்து மழையை தீண்டுவேன்.ஆனா அதுவும் நீண்ட நேரம் நீடிச்சதில்லை. மழையில நெனஞ்சா காய்ச்சல் வரும். வீட்டுக்கு உள்ள போயிறனும் உடனடியா எந்த எதிர்ப்பும் காட்டாம. எனக்கும் எந்த எதிர்ப்பும் காட்டி பழக்கமில்லை. ஏத்துக்க வேண்டியது தான்.அப்புறம் தனியாக வந்து அழுதுக்கலாம்.
மழைக்கு வீட்டு கதவுகள் சாத்தப்படும்.

நல்ல வேளையாக கூரை வீடுகளுக்கு மழை சப்தத்தையும் இடிசத்ததையும் அன்னியப்படுத்த இயலாது. மனதில் மழை பெய்ய தொடங்கியது அப்படி தான்.ஏகாந்தம் உணரத்தொடங்கியதும் அப்படி தான்.அதிகம் மௌனமானதும் அப்படித்தான். மனதளவில் திண்ணைத்தூண் அருகில் சாய்ந்து மழையில் கால் கை நினைத்து பின் முகம் நினைத்து மழை நிரம்பி வழியும் நொடிகளில் படர்ந்த வெண்திரையில் கடந்து செல்லும் வாகணங்களின் அழகு மனிதர்களின் அவசரம்.குழந்தைகளின் மௌனமான சந்தோசம். ஆமாம். நிறைய குழந்தைகள் மௌனமாகத்தான் தன் சந்தோசத்தை அனுபவிக்குது.

இப்ப வளரும் என்னைப்போல குழந்தைகளுக்கு திண்ணையோ தூண்களோ பெரும்பாலும் கிடைக்கிறதில்லை.கிடைக்கப்போறதுமில்லை.அப்படி ஒன்னு இருக்குன்னு இருந்ததுன்னு கூட தெரியாது. ஆனாலும் எனக்கு இப்ப எழுத்து மூலமா வாழ்க்கையின் அழுத்தங்கள்ல இருந்து தப்பிக்க முடியும் னு தெரிஞ்ச மாதிரி அந்த சின்னபையனுக்கு சற்றே கரடுமுரடாண அந்த திண்ணைதூன் தெரிஞ்சிருக்கு. திண்ணைத்தூண் இல்லாத குழந்தைகளுக்கு வேற எதையோ காலம் விரல் நீட்டி காட்டியிருக்கலாம். அதுகளும் அதுல சாய்ந்திருக்கலாம்.

இந்த உலகத்துல இரண்டு வகையான மனிதர்கள் இருக்காங்க.ஒன்னு அன்பை தேக்கி வெச்சி வீணாக்குறவங்க. இன்னொன்னு அன்புக்காக ஏங்கி ஏங்கி சாகுறவங்க.இந்த இருவரும் பெரும்பாலும் சந்திக்கிறதேயில்லை.சந்திக்கும் பொழுது அன்பை பற்றி பேசிக்கிறதில்லை.

இந்த பெத்தவங்க மட்டும் கொஞ்சம் அன்பை அப்ப அப்ப பகிர்ந்துட்டா எப்படி இருக்கும்.

Read more...

மனோநிலை - 4

திருவினை - யாத்ரா

திருவினையாகாத முயற்சிகளை நொந்து
கயிற்றைத் தேர்ந்தெடுத்தேன்
கடைசியாக
அதற்கு முன்பாக
மலங்கழித்து விடலாமென
கழிவறை போக
பீங்கானில் தேரைகளிருக்க
கழிக்காது திரும்பி
வரும் வழியில்
எறும்புகளின் ஊர்வலத்திற்கு
இடையூறின்றி கவனமாக
கடந்து வந்தேன் அறைக்குள்
கரிசனங்கள் பிறந்து விடுகிற
கடைசி தருணங்களின்
வினோதத்தில் புன்சிரித்தேன்
என்றுமில்லாமல் அதிகமாய் வியர்க்க
பொத்தானையழுத்தப் போகையில்
சிறகுகளில் படர்ந்திருக்கும் சிலந்தி வலை
பார்வையில் இடறியது
40000 உயிர்கள் மாண்டுபோன
செய்தி தாங்கிய
தினசரி அருகிருந்தது
விசிறயேதேனும் அகப்படுமாவெனத் தேடுகையில்
சாம்பல் கிண்ணத்தில்
பிணங்களென்றிருக்கும்
துண்டுக் குவியல்களைக் கண்டு
கடைசி சிகரெட் பிடிக்கும்
ஆசையையும் கைவிட வேண்டியதாயிற்று
சட்டென்ற திரும்புதலில்
கலைந்த பிரதிகளுக்கிடையொன்றில்
பின்னட்டையிலிருக்கும் ஆத்மாநாமை
லேசாய் இதழ்விரிய முகம் மலர
சில கணங்கள் பார்த்து
உணர்வுமிகுதியில் ஒரு முத்தமிட்டு
காத்திருக்கும் கயிற்றிற்க்கிரையாக
கதவைச் சாற்ற
கதவிடுக்கில் நசுங்கியிரண்டான
பல்லியின் வாயிலிருந்து
தப்பிப் பறந்ததொரு பூச்சி



கவிதை தனிப்பட்ட முறையில் கருத்தியல் ரீதியாக என்னை மிகவும் பாதித்தது.
அதையும் தாண்டி

//சட்டென்ற திரும்புதலில்
கலைந்த பிரதிகளுக்கிடையொன்றில்
பின்னட்டையிலிருக்கும் ஆத்மாநாமை
லேசாய் இதழ்விரிய முகம் மலர
சில கணங்கள் பார்த்து
உணர்வுமிகுதியில் ஒரு முத்தமிட்டு//



ஆத்மநாம் - நகுலன் இவுங்களை எல்லாம் ரொம்ப பிடிக்கும் னு சொன்னா அது சாதாரணம்.
அவுங்களுக்கும் எனக்குமான நெருக்கத்திற்கு வார்த்தைகளே இல்லை ன்னு நினைச்சேன்.
தூக்குல தொங்க போகும் போது முத்தமிடுவது ங்கிறது இருக்கே.அது அதை உணர்த்துது.

ரசிகன்னு சொல்ல முடியாது.
பிடிக்கும் னு சொல்லமுடியாது
காதலன் ன்னும் சொல்ல முடியாது
வெவ்வேறு காலத்தில் இருந்த ஒருத்தனோட ஆத்மார்த்தமான உறவு.
உடலுக்கும் உணர்வுக்குமான நெருக்கம்.

ஒரு வேளை இதுதான் பக்தி இலக்கியத்துக்கெல்லாம் அடிப்படையோ என்னவோ.

நான் உன்னை பார்த்ததில்லை.
தீண்டினதில்லை.
நீ நான் நினைச்ச மாதிரி இருக்கியான்னு இருந்தி்ருப்பியான்னு கூடத் தெரியாது.

உன்னை பற்றிய சில வார்த்தைகள்.அது வழியா உன்னை முதல்ல அணுகுகிறேன்.பிறகு நீ எனக்கு நெருக்கமா அறிமுகமாகிற தருணம்.அதாவது நான் என் உணர்வுகளால உன் உணர்வுகள் (வார்த்தைகள்) வழியா உன்னை நெருங்கும் தருணம். இந்த பிரபஞ்சத்தில் இந்த வெளியில் கறைந்து இருக்கும் உன்னை என் பார்வை கண்டடையும் தருணம்

என்ன சொல்லியும் மனசு நிறையல.
மனதை மொழிபெயர்க்க இன்னும் பழகவேணும்.இன்னும் பயணிக்கனும் மொழியில்.

Read more...

மனோநிலை -3


அடிமைகளை உருவாக்குவது எப்படி - அனிதா

மிக எளிது.
ஒரு புன்னகையில் துவங்கி
நட்பு, பிரியம் என மெல்ல, மிக மெல்ல
முன்னேறவும்.
உனக்கென நான் (மட்டுமே) இருக்கிறேனென
புரிதல் உண்டாக்கவேண்டும்

ஆரத்தழுவிக்கொள்ளலாம்
காமம் இல்லாமலும்
பின் காமத்தோடும்.

என்னைப் பிரிந்தால்
விஷப்பாம்புகளுக்கு இரையாவாய் என்றும்
எச்சில் இலைகளிலிருந்து
உணவு உண்ண நேரும் என்றும்
எச்சரித்தபடியிருப்பது உசிதம்

எண்ணற்ற முத்தங்கள்
நேரம் காலம் பார்க்காமல் தரவேண்டும்
பெறவேண்டும்.

வெளிர் நீல வானில்
பறவைகள் பறப்பதைக் காட்டுவது
சுதந்திரமாய் இருப்பதாய் நினைத்துக்கொள்ள உதவும்.

ஆயிற்று.
வருடத்திற்கோர் அடிமையை சுலபமாய் உருவாக்கலாம்

மிகக் கவனம்...
அடிமைகள் உங்களைப்பற்றி
பேசிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவும்

அனிதா கவிதைள்

Read more...

மனோநிலை - 2

ஆத்மநாம் கவிதைகள் என்னை மிகவும் பாதித்தவை.

என் (என்னை போன்ற பிறநண்பர்கள்) இன்றைய மனநிலையே அப்படியே உணர்த்தும் இந்த கவிதையை அகநாழிகை பதிவில் படித்தேன்.


ஏதாவது செய் - ஆத்மாநாம்

ஏதாவது செய் ஏதாவது செய்
உன் சகோதரன்
பைத்தியமாக்கப்படுகிறான்
உன் சகோதரி
நடுத்தெருவில் கற்பிழக்கிறாள் சக்தியற்று
வேடிக்கை பார்க்கிறாய் நீ
ஏதாவது செய் ஏதாவது செய்
கண்டிக்க வேண்டாமா
அடி உதை விரட்டிச்செல்
ஊர்வலம் போ பேரணி நடத்து
ஏதாவது செய் ஏதாவது செய்
கூட்டம் கூட்டலாம்
மக்களிடம் விளக்கலாம்
அவர்கள் கலையுமுன்
வேசியின் மக்களே
எனக் கூவலாம்
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்யத்தவறினால்
உன்மனம் உன்னைச் சும்மா விடாது
சரித்திரம் இக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீர்ய மிழந்தவன் என்றும்
குத்திக் காட்டும்
இளிச்ச வாயர்கள் மீது
எரிந்து விழச்செய்யும்
ஆத்திரப்படு
கோபப்படு
கையில் கிடைத்த புல்லை எடுத்து
குண்டர்கள் வயிற்றைக் கிழி
உன் சகவாசிகளின் கிறுக்குத்தனத்தில்
தின்று கொழிப்பவரை
ஏதாவது செய் ஏதாவது செய்

--ஆத்மநாம்

Read more...

மனோநிலை - 1

நாய்கள் - நகுலன்

நானும் நாய்களைப் பார்த்திருக்கிறேன்
அவைகளின் அகாலத் துயிலை
அகலும் புட்டியைச் சுவைக்க
அவை செய்யும் வீண் முயற்சிகளை
வாந்தியை முழுங்குவதை
பேசுவதை நிறுத்தமுடியாமல் தவிப்பதை
பெண் துவாரம் தேடி அலைவதை
உணவு தடுக்கப்பட்டால் கடிப்பதை

-நகுலன் (நாய்கள்)

Read more...

இராவணன்

எல்லோருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு.இன்று முதல் மகாகவி திரு. இலக்குவண் அவர்கள் இராவணன் என்றே அழைக்கப்படுவார் ;)))

அன்புடைய நண்பர்களுக்கு,

இன்று முதல் என்னுடைய பெயரை இராவணன் என்று மாற்றியமைக்கிறேன்.அவ்வாறே என்னை அனைவரும் அழைக்கவேணும் என்றும் விரும்புகிறேன்.

பெயரில் என்ன இருக்கிறது?.
உண்மைதான்.
இருந்தும் இலக்குவண்(லஷ்மண்) என்ற புனித அடையாளம் முகமூடி போல சுமையாய் இருக்கிறது.இராவணன் என்பது எனக்கும் என் வாழ்விற்கும்மிகவும் நெருக்கமானதாகவும் ஒரு மனித அடையாளமாகவும் என் மொழி அடையாளமாகவும் இருப்பதாக தோன்றுகிறது.

நன்றி

பி.குறிப்பு : இங்கே புனிதம் என்பது பொது புத்தி சார்ந்த புனிதத்தை குறிப்பதே அன்றி
எந்த வார்த்தையிலும் இராவணனை தரம் தாழ்த்தி கூறுபவை அல்ல. இராவணனை மதிப்பதால் தான் அந்த பெயரை பெருமையுடன் ஏற்கிறேன்

Read more...

கால பைரவன் கண்சிமிட்டுகிறான்

பெரிதும் நிராகரிக்கபட்டவள்
ஒரு
அடிமையைக் கண்டடைகிறாள்

வேசிகள் என்று
இழிந்து திரிந்தவன்
கண்கள் பனிக்க
குழந்தையைத் தீண்டுகிறான்


காதலிக்கச்சொல்லிக் கெஞ்சியவன்
ஆழ்ந்து உறங்குகிறான்

எல்லோருக்கும்
அண்ணனாக வலம்வந்தவன்
நீலப்படங்களைத் தேடி அலைகிறான்

மென்முலைகள்
பெருத்துப் பாலூட்டி ஆகின்றன

என் இரவுகள்
சில
தினங்களுக்கு முன்
அழகாக இருந்தன


இந்த கவிதை வா.மு கோ.மு உடைய பாதிப்பு- சொல்லக்கூசும் கவிதைகள்

Read more...

கோடை

நெருக்கமான
வெயிலின் கரங்கள்
மூச்சுதிணறும்
முத்தங்கள்
நிரம்பியது

சூரியப்புணர்தலில்
பொதுஇடத்தில்
நிரம்பி வழிகிறது
வியர்வை
எப்படி இருக்க வெட்கப்படாமல்

காற்றுக்கேங்கும்
மனிதப்பார்வையை
அசைந்து அசைந்து
பரிகாசிக்கிறது
ஒரு பசுந்துளிர்
வெளிச்சம் வழிய

(இந்த வலைப்பூவைப்போல)

Read more...

சற்றே தாமதமாக

1.
சாலைகள் பூக்களாகின
நகரம் தடாகம் ஆனது

காலப்படிகளில்
கண்
இமையைக்
கண்டடைந்தது

இனி எந்த
தூசிக்கு
இங்கு
இடமில்லை


2.
கத்திக்கொண்டிருந்தக்
குழந்தைக்குப்
பால்சோறு

தனிமை
இறந்தகாலம்

தடாகம்
முழுதும் நனைந்திட


நாங்கள்
கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறோம்

Read more...

ஒரு பறவை ஒரு கிளை

ஒரு கிளையில்
ஒரு பறவை
வந்தஅமர்ந்து
அன்பைப்
பாடுகிறது

பறவை
கூடுகட்டலாம்
இனி
கிளைப்
பறவையாகி
உடன் பறக்கலாம்

சில
உண்மைகள்

பறவை
கிழக்கில் இருந்து
வந்தது

கிளை
கூடுகளற்றது

Read more...

அன்புற்றிருத்தல்



இந்த மாலைப்பொழுதில்
அழகாகவே இருக்கிறது
சூரியன்
மேகம்
மற்றும் வாழ்க்கை

சொல்ல மறந்துவிட்டேன்
அந்த மீன்கள்
முத்துமிட்டுக்கொண்டன
மணல்வெளி கடலானது

Read more...

வழி தவறிய மீன்கள்

வழி தவறிய
மீன்கள்
சந்தித்துக் கொண்டன
மணல்வெளியில்

இரண்டிடமும்
கடல் பற்றிய கதையிருந்தது
கடல் இல்லை

தத்தம் வழியில்
மரணம் நோக்கி
தொடர்கின்றன

ஒரு கைப்பற்றுதலோ
ஒரு முத்தமோ
நிகழ்ந்திருந்தால்
ஒருவேளை
கடல்
அற்றும்
வாழ்ந்திருக்கக்கூடும்

Read more...

மரணத்தின் வாசனை - அகிலன்



ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்
இந்த மிக எளிமையான வரியில் ஆழம் நிறைந்த வலியை பதிவு செய்திருக்கும் என் சகோவின் (என் சகோதரன் என்று தன்னிச்சையாக நான் அழைக்கும் அகிலனின்) இந்தப்புத்தகத்தை எந்த வித வண்ணத்தின் வழி பரிதாபத்தையும் எதிர்நோக்காத ஒர் ஆவணப்படத்தின் எழுத்துருவாக்கமாகவே உணர்கிறேன்.

மதிப்புரை வழங்கும் அளவிற்கு நான் என்னை உயர்த்திக்கொள்ளாத(சரியான வார்த்தையா தெரியவில்லை) இந்த சூழலிலும், இந்த பதிவை ஒரு வாசகப்பதிவு என்றும் அந்நியப்படுத்த ஏலாது. மேலும் என் சகோவிற்கும் (மற்ற ஈழநண்பர்கள் பலருக்கும்) எனக்கும் இடையில் எளிதில் கடக்க முடியாத எப்பொழுதும் நிறைந்திருக்கும் நிழல்களின் சில அடையாளங்களை அறிய ஏதுவாக இந்த புத்தகம் அமைந்திருக்கிறது.
(இந்த பதிவின் உண்மைத்தன்மை அறிய விரும்புவோர்க்கு ஒரு தகவல். இன்னொரு மரணத்தின் வாயிலில் நானே நேரில் சகோவிடம் கேட்டுப்பெற்ற இந்த புத்தகத்தில் அவர் கையெழுத்திடவும் இல்லை. நான் பணம் தரவுமில்லை)



ஒவ்வொரு பகுதி தொடங்கும் பொழுதும் அந்தப்பகுதியில் முன்னிலை படுத்தப்படும் உயிரின் மரணம் இறுதியில் அறிவிக்கப்படும் என்பது நாம் அறிந்ததே. மேலும்
போருக்கும் மரணத்திற்குமான தொடர்பும் புதிதல்ல.
ஆயினும் இங்கு எளிமையான ஒரு மனிதனின் அண்ணன் பாட்டி சித்தி தந்தை தோழி காதலி நாய்குட்டி பூனை இன்ன பிற உறவுகளின் / உற்ற உயிர்களின் வாழ்க்கைக்கும் போருக்கும் உள்ள அதீதத்தொலைவும் அந்த தொலைவை மிகச்சில நொடிகளில் வென்றுசெல்லும் செல்களையும் பற்றிய உண்மைகளோடும் தீராத அமைதியோடு அழுகுரல்களையும் பதிவுசெய்திருக்கிறது இந்த புத்தகம்.

குறுக்காசும், பெடியல் மற்றும் ஆமிக்காரர்கள் எல்லாரும் போரின் சாட்சிகளாக வந்துபோகிறார்கள்.அதாவது இங்கு சொல்லப்படும் அனைத்து மரணத்திற்கும் போர் காரணம் எனபதை மட்டும் சொல்லிவிட்டு போருக்கு யார் காரணம் என்ற கேள்வியை காலத்தின் கையிலேயே விட்டுவிட்டுத் தொடரும் இந்த எழுத்துக்களின் மௌனம் நம்மை தடுமாறவே செய்கிறது.

இந்தப்புத்தகத்தில் உள்ளது போல குண்டு விழுந்ததை கூட 'நேற்று இரவு குண்டு விழுந்தது' என்று இயல்பாக எழுத முடியுமா என்பது அதிர்ச்சியாய் தோன்றுகிறது. அகிலனைப்போன்று போருக்கிடையிலே வாழ்ந்தவர்களால் மட்டுமே இவ்வாறு எழுதமுடியும் என்றும் இது போரின் மிகக்குரூரமான முகம் என்றும் சற்றே நிதானிக்கும் பொழுது அவதானிக்கமுடிகிறது.

அதே நேரம் போர் சூழலிலே பிறந்து வளர்ந்த மனிதனுக்குள்ளும் நகைச்சுவை உணர்வு உள்ளது என்பதை பதிவு செய்ய மறக்கவில்லை அகிலன். முக்கியமாக இன்றைய காலகட்டத்தில் நாம் அதிகம் பதற்றத்தோடு கேட்டறிந்த 'தந்திரோபாய பின்நகர்வு' என்ற சொற்றொடர் இந்த புத்தகத்தில் பயன்படுத்திய இடத்தில் வாய்விட்டு சிரிக்க வைத்ததை மறக்க ஏலாது. மற்றும் 'தொடங்கீற்றான்ரா சிங்கன்'

இந்த புத்தகத்தின் மூலம் ஈழ வாழ்வை நெருங்கிபார்க்க முடிந்தது என்பதில் நிறைவும் அதை வேளை துர்மரணங்கள் ஏற்படுத்தும் வெறுமையும் ஒரே நேரத்தில் உணர்வது சற்றே எதிர்கொள்ள இயலாத கணத்தை ஏற்படுத்திவிடுகிறது.
இங்கு மரணத்தின் வாசனை யின் உள்ளீடுகளை அதிகம் பதிவு செய்ய விருப்பமில்லை.அதன் மீதான என் மீ-பார்வைகளை மட்டுமே பதிவுசெய்கிறேன்.மற்றவை படித்து அறியவும்.

மரணத்தின் வாசனை என்ற தலைப்பு முதலில் என்னை அசௌகரியப்படுத்தியது. அதற்கு அகிலன் காரணமல்ல.இங்கே பலவார்த்தைகளை நம் வியாபார நோக்கிற்காக அதன் அர்த்த ஆழங்களை பற்றி சிறிதும் அக்கறையற்று வெறும் உவமையாகவும் ஈர்ப்புக்காகவும் பயன்படுத்துகிறோம். உதாரணத்திற்கு முலை,யோனி,மரணம்,ரத்தம்,வெளி,பிரபஞ்சம் இன்னபிற.

ஈழம் குறித்து பலரும் எழுதுகிறோம். அது கேள்வி ஞானத்தால் ஆனது. வாசனை என்பது நேரில் சந்தித்த வாழ்க்கை என்பதன் தெளிவை ஏற்படுத்துகிறது. உண்மையில் இந்த புத்தகம் ஒரு சிறுவனின் வாக்குமூலத்தின் வழி 'மரணத்தின் வாசனை' என்ற இரண்டு வார்த்தைகளின் ஆழத்தை நோக்கி பயணிக்கிறது.


ஈழம்வாழ்வின் பகல் இரவை அறிய எண்ணுபவர்களுக்கு இந்தப்புத்தகம் மிகவும் நெருக்கமானதாக அமையும் என்றே கருதுகிறேன்.

Read more...

சென்னையில் மாபெரும் ஒன்றுகூடல்பெப்ரவரி 22 - 2009 மெரினா கடற்கரை போர்நினைவகம் முதல் காந்திசிலை வரை - இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்

அன்புள்ள நண்பர்களுக்கு,
நிறைய பேசியாயிற்று
நிறைய விவாதித்தாயிற்று
மனிதாபிமானம் பற்றி
தற்கொடைப்பற்றி

தற்கொலையின் முட்டாள்தனம் பற்றி
தற்கொலையின் தியாகம் பற்றி
ராஜீவ் காந்தியின் கொலைப்பற்றி
அதன் துன்பியல் பற்றி
அதன் மர்மங்கள் பற்றி

இந்திய தேச இறையாண்மைப்பற்றி
தடைசெய்யப்பட்ட இயங்கங்கள் பற்றி
அவைகளைப்பற்றிபேசுவதின் சட்ட சிக்கல் பற்றி
அந்த தடையின் நியாயங்கள் பற்றி

அந்த தடையை உடைபதைபற்றி
இனவெறுப்புகள் பற்றி
மனிதக்கேடயங்கள் பற்றி
பாதுகாப்பு வலையம் பற்றி

Cocentration Camp பற்றி
இந்திய தேசிய ஒருமைப்பாடு பற்றி
தமிழ்தேசிய பிரிவினைவாதம் பற்றி
இந்தியனாய் இனைவோம் பற்றி
தமிழனாய் எழுவோம் பற்றி



பயங்கரவாதிகள் பற்றி
விடுதலைப்போராளிகள் பற்றி
மதவெறிகளைப்பற்றி
எல்லாம் கடந்த மனிதநேயம் பற்றி


எல்லாம் கடந்து ஒன்று மட்டும் நிச்சயம்
அங்கே பிணங்கள் குவிவதை யாரும் மறுப்பதற்கில்லை.
இன அழித்தல் நடப்பதை யாரும் அறியாமலில்லை

பிணங்களின் மேல் ஒன்றும் நடக்கவில்லை
என்று சத்தியம் செய்ய நாம் தயாராயில்லை


நேற்று(17- பெப்ரவரி-2009) கொல்லப்பட்ட 104 (50 குழந்தைகள் உள்பட) உயிர்களுக்காய்
இந்த புத்தாண்டில் மட்டும் இறந்த 1700 உயிர்களுக்காய் 4000 மேற்பட்ட படுகாயப்பட்டவர்களுக்காய் இதுவரை 60 ஆண்டுகளின் , இறந்த 70 000 அப்பாவி தமிழர்களுக்காய்

ஒன்று கூடுவோம் ஒரே குரலாய் ஒரே குறிக்கோளோடு
‘போர் நிறுத்தம் வேண்டும் . இனஅழித்தலை நிறுத்த வேண்டும்’

எந்த அரசியல் உள்நோக்கமுமில்லை. எந்த அரசியல் கட்சியுமில்லை
பொதுமக்கள் இனைந்து பொதுமக்களால் நடத்தப்படும் இந்த மாபெரும் அமைதி நடைக்கு ஒன்று கூடுவோம்

இடம்: போர் நினைவகம் தொடங்கி காந்தி சிலை வரை, மெரினா கடற்கரை, சென்னை
நாள் : 22- பெப்ரவரி – 2009 (ஞாயிறு)
நேரம் : மாலை 4 மணி

குடும்பத்தோடு வாருங்கள்.
இந்த அமைதி நடையில் நடக்கும் ஒவ்வொருவராலும் அங்கே ஓர் உயிர் பிழைக்கும்.
2 ½ இலட்சம் அப்பாவித்தமிழர்கள் உங்களை கையேந்தி நிற்கிறார்கள்.

ஓர் இனம் அழியும் பொழுது நடுநிலைமை என்பது மனிதத்தன்மை அல்ல
ஒன்று படுவோம் இன அழித்தலைத் தடுப்போம்



இலக்குவண்
இனஅழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்
www.indiansagainstgenocide.org

Read more...

பின்பனிக்காலம் ,100 அடி சாலை, காலை ஒன்பது மணி

உலகெலாம்
உடல்கலாயின

அடைப்புக்குறிகளாய்
ஆடைகள்

முத்தம் தூண்டும்
இதழ்கள்

வழி நெடுகும்
முலைகள்
மெட்டிகள்
மி்கச்சில முகங்கள்

உயிர் கூச
இமைகளை மூடி
கண்களை
புதைக்கிறேன்
நினைவுத்தூண்களில்
கோயில் சிலைகள்
வழிபட யாருமற்று
வளரத்துவங்குகிறது
கடவுளின் அழகியலோடு
லிங்கம் ஒன்று


நீயற்ற பொழுதில்
உலகமெல்லாம்
வெறும்
உடல்கலாயின

Read more...

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP