மௌனங்கள்

மௌனங்களால்
அறுந்து கிடக்கும்
உயிரில்
கசியும் குருதியை
ஈக்கள் மொய்க்கின்றன
இரவு நேரங்களில்
நாய்களும்

இந்தப்பொழுதின்
மென் காற்றில்
வண்ணங்கள் தூவி
மிதந்துகொண்டிருக்கிறது
ஒரு நீர்க்குமிழி
எந்த நொடியும்
உடையக்கூடிய சாத்தியங்களோடு

Read more...

ஒரு புன்னகை

உடன் பகிர்ந்து விட
இயலாத ஒரு புன்னகை
சிதறி கிடக்கிறது
பூக்களாய்
பிணம் சென்ற
வழியெல்லாம்

வெறும்
அடையாளமாகவும்
தனித்தும்
நிராகரிப்பின் வலியோடும்

எந்த பிரக்ஞையுமற்று
மெல்ல
மேற்கு நோக்கி
நகர்கிறது சூரியன்

Read more...

என் அறையில்





அந்த அறையில்
எறும்பும் புழுவும்
சற்றுமுன் துளிர்த்த ஒரு பூச்செடியும்
கொலையுறும் சப்தம்
எப்பொழுதும்
கேட்டுக்கொண்டிருக்கும்

இரக்கமற்ற பதில்கள்
குரூர விழி திறந்து
இரவுகளில்
உள் உலாவும்
பசியோடும் பல்குத்தும் மரக்கிளையோடும்

வன்புணர்வின் அடையாளங்களோடு
அறை நடுவில்
கிடத்தப்பட்டிருக்கும்
ஓர் குழந்தையின் உடல்

அதிர்வுகளற்ற மெல்லிய
அதன் சுவாசத்தில்
நிரம்பி வழியும்
என்றாவது கேட்கும்
ஒரு தாலாட்டின் நம்பிக்கை

இயல்பாகவே இருக்கிறது
அவ்வப்பொழுது
பிணமென வெளியேறவும்
உயிர்ப்புடன் இருக்க
ஊர்க்கதை மட்டும்
பேசிச் சிரித்துக்கொள்ளவும்

Read more...

ஆண்டவன் கனவு

இரவின் இருளுக்கு பயந்து
கைக்கும் எட்டாத தூரத்தில் ஒளிந்துகொள்கிறது
உறக்கம் நடுக்கத்தோடு
அழைத்தும் வெளி வர மறுத்து

தனிமையின் வெம்மை தாளாது
உலர்ந்து கிடக்கும் நொடிகளை
சுமந்து செல்ல விருப்பமின்றி
கடிகார முள்
மெதுவாய் நகர்கிறது

எல்லாமும் சரியாக இருப்பதான
நினைப்போடு எந்த வித அடிப்படை தொடர்புகளற்ற
நானும் நானின்மையும் இன்னும் சில
எதார்த்தங்களையும் ஒன்று சேர்த்து
கனவொன்றை காணும்
இறைவனுடைய நிகழ்காலத்தின் வலியுணர்ந்து
வருத்தம் கொள்கிறேன்!

பகிர்வுந்தில் (share Auto) என் தொடை உரசி அமர்ந்திருக்கும்
அந்த ஆன்மாவுக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை
நான் ஆண் அது பெண் என்பதை தவிற!

Read more...

சந்திப்பு

பயபக்தியுடன்
கோவிலின் கருவறை
உள் நுழைந்தேன்


நேற்றிரவுப்பார்த்த
பிசாசைப்பற்றி
கடவுள் முன்
கூறிக்கொண்டிருந்தேன்
வெளிறிய முகத்துடன்

தானும் தான்
என்ற கடவுளின்
முகமும் வெளிறி இருந்தது

Read more...

கோணங்கள்

அவளைப்
பார்த்துக்
கொண்டிருந்தேன்

அவள்
என் பார்வையைக்
கவனித்து
தன் ஆடைகளை
சரி செய்துகொண்டாள்

உண்மையில்
அவளுக்கு தெரியவில்லை
நான்
அவளைப்
பார்த்துக் கொண்டிருப்பது!

Read more...

வெளிச்சம்

பிரபஞ்சத்தின் இருள்
துகள்களுக்குள்
நான் கரைய மிச்சமாய்
உயிர்த்துக் கிடந்த விரல்கள் தீண்டின
ஒரு் தாவணிப்பெண்ணின்
இடையையும்
பறக்கத் துடித்த
ஒரு பட்டாம் பூச்சியின் சிறகையும்

மீண்ட வெளிச்சத்தின்
அசௌகரியத்தில்
அவைகள்
உயிரிழந்து உருமாறின
யாரோ விட்டுச்சென்ற
கைக்குட்டையாகவும்
என்னுடைய பழைய கவிதையாகவும்

கைகால் முளைத்து
நானும் ஆறடி
மனிதனாக
நாகரீகம் கருதி
ஆடைகள் தேடிக்கொண்டிருந்தேன்
அப்பொழுது

Read more...

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP