அங்காடித்தெரு - ஒரு எதிர்வினை

திரு வசந்த பாலன் sir,


அங்காடித்தெரு திரைப்படம் பார்த்தேன்.படத்தின் பெயர் அறிந்த காலத்தில் இருந்து அதன் மீதான ஈர்ப்பு இருந்துகொண்டே தான் இருக்கிறது. ('வெயில்' தலைப்பும் அப்படித்தான்).
ஒரு மிக முக்கியமான பிரச்சனையை கையிலெடுத்துள்ளீர்கள்.


படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது


1)படத்திற்கு தேவையான தகவல்கள் சேகரித்தது.
2)ஒரு பல்பொருள் (மிகப்பெரிய) அங்காடியின் அனைத்து அங்குளங்களையும் பதிவுசெய்தது
3)ரங்கநாதன் தெருவின் வெவ்வேறான வாழ்கையை பதிவு செய்தது.
4)இந்த கதை கருவை பிடிவாதமாக எடுத்த உங்கள் தைரியம் மற்றும் மனோபலம்
5)அஞ்சலியின் நடிப்பு. (விருது வழங்கப்பட வேண்டும்)


படத்தை பார்த்து வந்து ஒரு அயர்வு/தூக்கமின்மை என்னை முழுவதுமாக ஆட்கொண்டது. அதற்கு காரணத்தையே இங்கே தருகிறேன்.


ஒரு சமூகப்பிரச்சனையை திரைப்படமாக அனுகும் போது மிகவும் கவனம் தேவை. காரணம் அது இங்கு இன்று வாழும் மக்களை அவர் தம் வாழ்வை நேரடியாக காட்சிப்படுத்தி அடையாளப்படுத்துகிறது. ஒரு செய்தித்தாள் நிருபரை விட பல மடங்கு பொறுப்புணர்வு ஒரு கலைஞனுக்கு தேவைப்படுகிறது.


ரங்கநாதன் தெருவிலோ குறிப்பிட்ட பல்பொருள் அங்காடியிலோ சுயதொழில் செய்யும் மற்றும் வேலைசெய்யும் மனிதர்கள் அதிகாரமேதுமற்ற ஏதிலிகள். அவர்களுடைய பிரச்சனை குறித்து பேச முற்பட்டிருக்கும் தாங்கள் இந்த படத்தின் சமூக எதிர்வினை(reaction in society after seeing the film) குறித்து யோசித்திருக்கலாம் என்பது என் ஆதங்கம்.


நாளை ஒரு அங்காடிக்குள் நுழையும் மக்கள் அங்கு வேலைபார்க்கும் பெண்கள் மீது வைக்கும் பார்வை எவ்வளவு இரக்கத்தோடும் குரூரமானதாகவும் இருக்கும். என்னை பொறுத்தவரை இப்பொழுது அந்த பெண்கள் அந்தரங்க இடத்தில் உள்ள காயங்களை காட்டுவதற்காக பொதுஇடத்தில் தங்கள் ஆடைகள் அவிழ்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருப்பதாகவேபடுகிறது.நான் அந்த காட்சிகளை முழுவதுமாக நீக்கச்சொல்லவில்லை.அதே சமயம் முழுக்க முழுக்க அந்த காட்சிகளை சுற்றியே படம் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.


திரைமறைவில் பெண்களை பாலியல் வன்கொடுமையை நிகழ்த்திய அன்னாச்சிகளின் அதிகாரத்தை விடவும் வெள்ளித்திரையில் அதை கொண்டுவந்து வியாபாரம் ஆக்கியது மிக அதீதமான அதிகாரம் என்றே கருதுகிறேன். அதிகாரம் படைத்த இருவருக்கு இடையை நிகழும் ஒரு போரின் இடையில், சிக்கித்தவிக்கும் சாதாரண மக்களை போல் அந்த அங்காடியில் வேலை செய்யும் அனைத்து பெண்களின் நிலை உள்ளது.


'அங்காடித்தெரு' ஒரு சுதந்திரத்தை அவர்களுக்கு கையளிக்கவில்லை. அது இயலாது.


குறைந்த பட்சம் அவர்களின் வாழ்கையை அவர்களின் மனிதத்தையும் அவர்களுக்கான நியாயத்தை ஒரு அதிகாரத்திற்கு எதிராக முன்வைக்கவும் இல்லை.ஏனென்றால் படத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் யாரும் மனிதர்களாகவே காட்டப்படவில்லை குற்றவாளிகளாக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.பின் அவர்களிடம் என்ன நியாயம் பேசமுடியும் என்ற இயலாமை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


பரிதாபத்திர்குறியதாய் காட்டப்பட்ட அந்த ஏதிலிகளின் வாழ்கை மீது அடுத்த சில தினகளுக்கு ஒரு இரக்கத்தை அங்கு செல்லும் அனைவருக்கும் ஏற்படுத்தும்.அதன் பிறகு எல்லாம் எதார்த்த நிலைக்கு திரும்பும். (அதாவது எதார்த்தம் மாறப்போவதில்லை). நம் வழியில் பார்க்கும் பிச்சைக்கு இடும் ஒரு ரூபாய்க்கும் வழியில் எதிர்கொள்ளும் எளிய மனிதரின் மீது நாம் செலுத்தும் ஒரு புன்னகைக்கும் மிக நீண்ட இடைவெளி உள்ளது.


சமூகப்பொறுப்புணர்வோட திரைப்படம் எடுக்க நினைத்தமைக்கு இப்பொழுதும் தலைவணங்கவே தயாராக இருக்கிறேன்.அடுத்த படத்தில் எளிய மனிதர்களை இன்னும் நெருங்கி பார்க்க முயற்சித்தால் அதில் நிறைய சுவாரசியங்கள் இருக்கும். நம்மால் யூகிக்க முடியாத அளவுக்கு நிறைய எதிர்வினைகள் இருக்கும். வாழ்கையை எதிர்கொள்வதில் எல்லோரும் வெவ்வேறானவர்கள். எல்லோரும் பரிதாபத்தை எதிர்பார்பவர்கள் அல்ல. மூத்திரத்தை வெளியேற்ற அனுமதிக்கபடாத பெண்ணின் பரிதாபம் விடவும் அவளுக்குறிய கோபம் பதிவுசெய்யப்படவேண்டியதாக உருமாறலாம்.


இந்த பதிவு எந்த உள்நோக்கத்தோடும் எழுதப்படவில்லை. எளிய மக்களை நெருங்கி பார்க்கும் ஒரு ஆவணப்புகைப்படக்கலைஞனின் ஆதங்கம் தான் இது.

8 :பின்னூட்டங்கள்:

Anonymous April 3, 2010 at 10:30 PM  

முதல்ல தலைப்ப மாத்துங்க... களம்பி வந்திடுவீங்களே பொட்டிய தூக்கிகிட்டு.... எதிர்வினையாம்ல... மண்ணாங்கட்டி....

இராவணன் April 3, 2010 at 10:33 PM  

:)))
நன்றி அனானி.

bandhu April 3, 2010 at 10:48 PM  

you are so right!
இந்த கடைகளில் வேலை பார்க்கும் எல்லா பெண்களுமே பலவந்தப் படுத்தப்படுபவர்கள் என்ற தவறான எண்ணத்தை தோற்றுவித்துவிடும் இந்த படம்.
an unintentional consequence!

Nimal April 3, 2010 at 11:04 PM  

எனது எண்ணமாகவும் இதுவே இருந்தது... படம் இறுதியில் எதை விட்டுச்சென்றிருக்கிறது எமது மனதில் என்று பார்த்தால் நேர்மறையாக எதுவுமே இல்லை என்றே தோன்றுகிறது...

Unknown April 3, 2010 at 11:53 PM  

#அனானி# இங்கே தங்கள் கருத்தை பதிவு செய்யலாம் அதைவிடுத்து முற்றிலுமாக உதாசீனப்படித்துவதோ மண்ணள்ளி தூத்திட்டுப்போறதோ சரியாகப் பட்வில்லை. சரி விஷயத்திற்கு வருவோம். #சுயம்#. இந்த படத்தில் என்ன சொல்லியிருக்க வேண்டும் எது தவறு என்றும் நீங்கள் தெளிவாய் குறிப்பிடவில்லை. நாளை அந்த அங்காடிக்குள் நுழைபவர்கள் அனைவரும் அவர்களை பரிதாபமாக பார்ப்பார்கள் என்வே அந்த இரகசியம் இரகசியமாகவே இருக்கட்டும் என்று நினைக்கிறீர்களா? பலாத்காரப்படுத்தப்பட்ட ஒரு பெண் தன் நிலையை வெளியே சொன்னால் அவள் மானம் போய்விடும் என்று சொல்வதற்கு நிகராக இருக்கிறது உங்கள் கூற்று. சரி அவர்களின் கோபத்தை பதிவு செய்யவில்லை என்கிறீர்களா? அந்த எளிய மனிதர்கள் எவ்வாறு தங்கள் கோபத்தை காட்ட முடியும்? தன்னை அதிகாரம் செய்யும் மனிதனை ரகசியமாய் பாதுகாப்பான தூரத்தில் நின்று கொண்டு யாருக்கும் தெரியாமல் தானே காட்டமுடியும். அது காட்டப்பட்டிருக்கிறதே.. கருங்காலி கதாபாத்திரத்தை பல சமயஙகளில் அப்படி தண்டிப்பதாக தானே காட்டியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் புரட்சி செய்யவேண்டும் என்று எதிர்பார்த்தால் அது உங்கள் தவறு. வேலைக்கு ஆள் எடுக்கும் போதே அவர்களின் எந்த தகுதியை பார்த்து வேலை தருகிறார்கள் என்பதை கவணிக்க. இதை சினிமாவாக பார்க்கும் போது சில[பல] குறைகள் தென்படத்தான் செய்கிறது. களத்திற்கு வெளியே நின்று பார்த்தது போன்றும் சில[பல] இடங்களில் தோற்றம் அளிக்கிறது ஆனாலும் அந்த குறைகளை இன்றைய தமிழ் சினிமா சூழலில் வைத்துப்பார்க்கும் போது பெரிதாக தோன்றவில்லை. தங்க்ள் விமர்சன்ம் இன்னும் தெளிவாக இருந்திருந்தால் சிறப்பு.குறிப்பாக இந்த பிரச்சனையை சமூக நோக்கோடு அனுகுவது என்றால் எப்படி இருந்திருக்கவேண்டும் என்ற உங்கள் கருத்து. அது மிக அவசியமானது.

ராம்ஜி_யாஹூ April 4, 2010 at 11:06 AM  

நல்ல பதிவு, இது ஒரு புனைவு திரை படமே.

எப்படி விஜய், அஜித் , ஜாக்கி ஜான் அறுபது ஆட்களை தனியாக அடித்து உதைப்பர்களோ அதே போலவே, கடை சூபர்வைசர் தனக்கு வேண்டிய பெண்களை தொடுவார், அடிப்பார்,

இது போன்ற நிறைய கற்பனை புனைவுகள் அதிகம் இந்த படத்தில்:
எந்த ஊழியரும் போலீசில் புகார் கொடுக்க மாட்டார், இந்த அங்காடியை விட்டால் வேறு கடைகளான ரத்னா ஸ்டோர், டேக்ஸ்டைலே இந்தியா, போத்திஸ், களஞ்சியம், ஆரெம்கேவி போன்ற அங்காடிகளில் வேலை கிடைக்காது.

ஆண் பெண் ஊழியர்கள் மீது உடல் சார்ந்த வன்முறை தங்கு தடை இல்லாமல் நடை பெறல் போன்ற காட்சிகளை பார்க்கும் பொது எனக்கு பேராரசு, ரவி குமார் பரவ இல்லை என்றாகி விட்டது.

தினேஷ் ராம் April 9, 2010 at 6:58 AM  

கண்ணாடித் தொழுவத்தில் சிக்கியவர்கள்: http://3.ly/9miQ

இராவணன் April 10, 2010 at 10:18 AM  

மிக நன்றி ரவி மற்றும் நிமல் மற்றும் ஸீனி மற்றும் ராம்ஜி மற்றும் சாம்ராஜ் பிரியன்.

srini :

முதலில் 1. நான் ஏற்கனவே சொல்லியிருப்பது போல அவர்களுக்கு நல்லது செய்யவேண்டுமானால் , முதலில் சூப்ரவைசர்களின் நியாயங்கள்(ஏதாவது இருக்குமே. அவர்களும் மனித உடல் மனம் கொண்டவர்கள் தானே. ). அவர்களை மனிதர்களாய் படைத்திருந்தால் ஒரு வேலை இந்த திரைப்படத்தை அவர்கள் பார்க்கும் பொழுது நான் எதிர்பார்க்கிற மாற்றம் அமைய வாய்ப்புள்ளது. 2. ஏதிலிகளின் எதிர்வினை: என் வீட்டில் பெரும்பாலான நான் சந்தித்த மனிதர்கள் அந்த அங்காடியில் வேலை பார்க்கும் மனிதர்கள் பெரும்பாலும் திமிர் பிடித்தவர்களாக இருக்கிறார்கள். அவர்குளுக்கு போய் படமா என்றார்கள். ' திமிர்' பிடித்தவர்கள் என்று அவர்கள் நினைப்பதனால் படத்தில் காட்டிய அத்தனை விஷயமும் தவறு என்று வாதிட முயல்வதாக நினைக்கவேண்டாம். அங்கு செல்லும் பொருள் வாங்குவோரிடம் திமிரோடு நடந்து கொள்வது என்பது அலுவலகுத்துக்குள் உள்ள அடிமைத்தனத்தின் மிக முக்கியமான எதிர்வினை. இது சுத்தமா பதிவு செய்யப்பபடவில்லை. 3. பெண்களின் பிரச்சனை காட்டவேண்டாம் என்று நான் சொல்லவரவில்லை. அதை காட்டும் பொழுது ஏதோ flash news போலவே படமாக்கப்பட்டிருக்கிறது. ஒரு கலைஞனுக்குறிய மனித்ததோடுகூடிய பதற்றம் அதில் இல்லை ( அந்த பெண்ணின் நடிப்பால் மட்டுமே அந்த காட்சி (படமே!) ஓரளவுக்கு பார்க்கும் அளவிற்கு இருக்கிறது.)4. making ன் குறைகள் வேறு ரகம். நான் அதற்கு வரவேஇல்லை. ஏனென்னென்றால் இந்த படம் எடுத்தக்கொண்ட விஷயம் மிக மிக மனிதம் சார்ந்தது. அதை சரியாக பதிவிட்டாலே போதும். 5.எல்லோர் வாழ்விலும் நிறை குறை உள்ளது. அதற்காக உங்களின் குறையை மட்டும் முன் பின் தெரியாத நூறு பேர் முன் நீங்க இந்த இடத்தில் இதுவாக வேலைபார்க்கிறீர்கள். நீங்கள் பரிதாபத்துக்குறியவர் என்று சொன்னால் உங்களால் அதை சகித்துக்கொள்ள முடியுமா (சுயமரியாதை நமக்கு மட்டுமானது அல்ல. படிப்பறிவில்லாத எளிமையான மனிதனுக்கும் உள்ளது).

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP