அலுவலகம்

இயந்திரங்களுக்கு
ஒத்திசைந்து
புணர இயலவில்லை

உணர்ச்சிகள் அற்ற
உருவங்களை
ஓவியமென்றும்
மனிதரென்றும்
கூச்சலிடத்தெரியவில்லை

குளிரூட்டப்பட்ட அறையின்
எல்லா திசைகளிருந்தும்
என்நாசியில் மட்டும்
நுழைகிறது பிணவாடை

இது கவிதையல்ல

தனிமையை உணர்ந்து
பக்கமிருந்து
சிறு அசைவுகளோடு
மனதின் இரணங்களை மருந்திட்டு
தோள் சாய்ந்து
தன் இருப்பினால் என் வாழ்வை அர்த்தப்படுத்தி
ஈரமணல் அமர்ந்து
கடல் பார்த்து மௌனித்து
வார்த்தைகள் தொலையும் இடங்களில்
கைகளைப்பற்றி
எல்லாம் பகிர்ந்துவிட்டதாய்
சிறுபுன்னகையோடு
கடல்காற்று முகம் அறைய
விழிநீர் மறைத்து
அந்த நிமிடங்கள் வாழ்க்கை வாழப்படுவதாய்
உறக்க சப்தமிடும் மனதோடு
இசைந்துருகி உயிர்பிரியும்
இந்த நொடிகளில்

தனித்து கிடக்கிறது
வாழ்க்கையும் மரணமும்

நான் வாங்கும் சம்பளத்தை குறித்து யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
நீ உன் செவ்வாய் கிழமை பற்றிய வழமையோடு

நீயற்ற பொழுதுகளில்

உன் காதுமடலருகே
மௌனமாய் வாழ்வின் இரகசியம் பகிர்ந்து
விட்டு விலகி
உலகம் பார்த்து கைகொட்டி சிரிக்கும்
தருணங்கள் தேடி
திண்ணையில் தூண் சாய்ந்து
காத்திருக்கிறது
ஒரு குழந்தை.

கூடு

நடுங்கும் குளிரில்
உடைந்த முட்டையோடுகளின் மிச்சமும்
குருதி நாற்றமும்
சகிக்காது
தனித்த கூட்டின் எல்லை கடந்து
சற்றுமுன் பிறந்த சிறு பறவை எழுப்பும் சப்தம்
இந்த உலகத்தின் எல்லா இரைச்சல் கடந்து
என்னை மட்டும் நெருங்குகிறது
இல்லை இல்லை
என்னிலிருந்து தான் தொடங்குகிறது

கவனிப்பாரற்று

நடைபாதையில்
பகல் முழுதும்
கவனிப்பாரற்று
இறந்து கிடந்த உடலொன்று
இரவில்
தன்முகத்தை
அலம்பிக்கொண்டு
நிலவை பார்த்து புன்னகைக்கிறது
பல்இடுக்கில் கசியும் இரத்தம் சுவைத்தபடி

கனவின் நீட்சி

நெரிசல் மிகுந்த
சாலையில்
மெல்ல நகரும்
பேருந்தின் கம்பியில் சாய்ந்தபடி
தன்னைமீறி வழிந்து பெருகும் கண்ணீருக்கும்
சற்றுமுன் கைதவறி
விழுந்து உடைந்து துர்நாற்றம் பரப்பும் அந்த கனவிற்கும்
நம்புங்கள்
எந்த சம்பந்தமும் இல்லை

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP